நம்
தமிழ்மொழிக்கண் உள்ள இலக்கியங்களின் வளர்ச்சியும், முறையும் பற்றிச் சமண
சமயச் சான்றோர் பலர், பல காலங்களில் பல துறையிலும் நல்ல தொண்டு
புரிந்துள்ளனர் என்பது தமிழகத்துத் தமிழரேயன்றித் தென்னிந்திய வரலாறு
காணும் பிறரும் நன்கறிந்த செய்தியாகும். சங்க இலக்கிய காலத்துக்குப் பின்
உண்டாகிய தமிழ் நூல்களின் இடையே இச்சான்றோர்கள் செய்தன சிறப்புற்று
விளங்குகின்றன. அறநூல்களுள் நாலடியார், அறிநெறிச்சாரம் முதலியனவும், இலக்கண
நூல்களுள் நேமிநாதம், நன்னூல், யாப்பருங்கலம் முதலியனவும், காவியங்களுள்
சிந்தாமணி, சூளாமணி முதலியனவும் முன்னணியில் நிற்கின்றன. புராண வகைக்கு
மேருமந்தர புராணமும், சமயவாதத் துறைக்கு நீலகேசியும் பிறவும் இருக்கின்றன.
இவ்வாறு தமிழ் மொழிக்கண் காணப்படும் எத்துறையினும் இச்சமண முனிவரின்
தமிழ்த் தொண்டு விளக்கமான இடம்பெற்று நிற்பதையறியலாம்.