சினிமாவில் 'பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு" தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.இப்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும், பெரிய திரையிலும் ஜொலித்தவர்கள். இவர்களில் சிலர், சின்னத்திரை உதயமான நேரத்தில் அதைப்பற்றி வெளிப்படையாக கிண்டல் செய்தவர்கள், பெரிய திரையில் தொடர்ந்து நீடிக்க முடியாத நேரத்தில், சின்னத்திரைக்கு வந்து, "இதுதான் அதிக அளவில் மக்களை சென்றடைகிறது" என்று முழங்கவும் செய்தார்கள்.ஆனால், தொடக்கம் முதலே சின்னத்திரையின் சக்தியைப் புரிந்து கொண்டு நல்ல புகழோடு இருந்த நேரத்திலேயே சின்னத்திரையிலும் தனது படைப்பு மூலமாக புகழ் பெற்றவர் டைரக்டர் கே.பாலசந்தர். நடிகர்களில் "வெண்ணிற ஆடை" மூர்த்தி.
சென்னை டெலிவிஷனின் ஆரம்ப காலத்தில், எஸ்.வி.ரமணனின் 'தினேஷ் - கணேஷ்' தொடராக ஒளிபரப்பானது. இதில் காமெடி செய்தார், மூர்த்தி.மூர்த்தியிடம் எழுத்தாற்றலும் இருந்ததால் அவரே கதை, வசனம் எழுதி, "ஜுலை-7" என்ற திகில் சீரியலை இயக்கினார். சன் டி.வி.யில் 13 வாரங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல், மூர்த்தியின் இயக்கும் திறனுக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்தது.